தமது தேனிலவைக் கொண்டாடுவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், ஒரு வர்த்தகருக்குச் சொந்தமான ஏ.டி.எம். அட்டைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருபத்தாறு வயதுடைய யுவதியொருவர் அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட வர்த்தகரின் கட்டிட நிர்மாண வளாகத்தில் மேசன் ஒருவராகப் பணிபுரிந்த அவரது காதலனின் வழிகாட்டலின் பேரில் இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது என விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.ஒரு தேவைக்காக கொழும்புக்கு வரும் தனது மனைவிக்கு ஒரு இரவு தங்குவதற்கு இடமளிக்குமாறு சம்பந்தப்பட்ட மேசன், வர்த்தகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தான் வீட்டில் தனியாக வசிப்பதால், யுவதியுடன் அவரது தாயாரும் வந்தால் மட்டுமே தங்குமிட வசதிகளை வழங்க முடியும் என்று வர்த்தகர் தெரிவித்துள்ளார். அதன்படி, யுவதியையும் அவரது தாயாரையும் வர்த்தகரின் வீட்டிற்கு அழைத்து வந்த மேசன், வர்த்தகரின் ஏ.டி.எம். அட்டைகளைத் திருடுமாறு யுவதிக்கு அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
மறுநாள் காலை, அந்த இரு பெண்களும் ஏ.டி.எம். அட்டைகள் இரண்டையும் எடுத்துக்கொண்டு, சந்தேகநபரான மேசனைச் சந்திப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பின்னர், அந்த அட்டைகளைப் பயன்படுத்தி முதலில் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தமது திருமணத்தைப் பதிவு செய்த பின்னர் வாதுவ பிரதேசத்திலுள்ள ஒரு ஹோட்டலில் தேனிலவு கொண்டாட இவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்கிடையில், வெலிகம நோக்கிச் சென்று கொண்டிருந்த சந்தேகநபரான மேசன், திறந்த பிடியாணை ஒன்றின் பேரில் வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது அவரிடமிருந்து சட்டவிரோத போதைப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தனது காதலன் பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பின்னர் மாத்தறை பிரதேசத்திற்குச் சென்றுள்ள இந்த யுவதி, திருடப்பட்ட ஏ.டி.எம். அட்டைகள் மூலம் மீண்டும் பணத்தைப் பெற்று இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் நகைகளையும் வாங்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த அத்துருகிரிய பொலிஸார், வங்கி வளாகங்களில் உள்ள சி.சி.டி.வி. கமரா காட்சிகளை அவதானித்த பின்னர் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். ஹம்பாந்தோட்டை, சிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த இந்த யுவதி ஒரு பிள்ளையின் தாய் என்பது தெரியவந்துள்ளது. அத்துருகிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நாரத பெர்னாண்டோ அவர்களின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் அபிஷேக் தலைமையிலான அதிகாரிகள் குழுவொன்று சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.