2010 ஆம் ஆண்டில் சதொச நிறுவன ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவரை விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு குறித்த வழக்கை எந்த தாமதமும் இன்றி மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்த திருத்த மனுவை விசாரித்த பின்னர், தொட்டவத்த, பி. குமாரரத்னம், தமித் சரத் திசாநாயக்க, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோரைக் கொண்ட ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது. பிரதிவாதிகள் எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டு, 2023 மே 19 அன்று கொழும்பு உயர் நீதிமன்றம் இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நீக்க எடுத்த முடிவு சட்டத்திற்கு முரணானது என்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் சுட்டிக்காட்டியது.
தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்காக இந்தத் தீர்ப்பின் நகலை கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறும் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்தபோது ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டி, இலஞ்ச ஆணைக்குழு முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொசவின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பதில் பணிப்பாளர் மொஹிதீன் மொஹமட் சக்கீர் ஆகியோருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு விசாரணையின் போது, இலஞ்ச ஆணைக்குழு சார்பில் அதன் உதவி பணிப்பாளர் நாயகம் அனுஷா சம்பந்தப்பெருமாள் உட்பட சட்டத்தரணிகள் குழுவொன்று ஆஜரானதுடன், பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உட்பட சட்டத்தரணிகள் குழுவொன்று ஆஜரானது.