சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் 500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடி நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் தயா கமகேக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி ஊழியர் தொழிற்சங்க ஒன்றியம் நேற்று (24) இந்த முறைப்பாட்டை கையளித்துள்ளதுடன், 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நியமனங்கள் மூலம் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலஞ்ச ஆணைக்குழுவிடம் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் சோமசிறி லியனகே, சம்பந்தப்பட்ட பதவிகளுக்கு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்களுக்கு மில்லியன் கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது ஒரு தெளிவான நிதி முறைகேடு என்றும், காலத்தால் மறைக்கப்பட்டிருந்த இந்த தகவல்கள் விசாரணைக்காக ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் சலுகைகளை வழங்கவும், சமுர்த்தி திணைக்கள நிதியை துஷ்பிரயோகம் செய்யவும் முன்னாள் அமைச்சர் செயற்பட்டுள்ளதாக இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மேலும், இந்த சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் சஜித் பிரேமதாசவும் சம்பந்தப்பட்ட அமைச்சரவையில் அமைச்சராக செயற்பட்டதாக தலைவர் மேலும் நினைவூட்டினார்.