
தலவத்துகொட பிரதேசத்தில் அமைந்துள்ள விமான டிக்கெட் மற்றும் விசா வழங்கும் நிறுவனத்திற்குள் புகுந்த ஆயுததாரிகள் ஆறு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தையும், ஒரு தொகுதி தங்க நகைகளையும் கொள்ளையடித்து தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று மாலை குறித்த நிறுவனத்திற்கு வந்த நான்கு பேர் கொண்ட இந்தக் கொள்ளையர் குழுவினர், தமது அடையாளத்தை மறைப்பதற்காக முகமூடிகளை அணிந்திருந்தனர். அவர்கள் வெள்ளை நிற ஆல்டோ ரக சிறிய காரில் வந்திருந்தனர். நிறுவனத்திற்குள் நுழைந்த இவர்கள், அதன் உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும் கூரிய ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி இந்தக் கொடூரமான கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமரா காட்சிகளை பரிசோதித்தபோது, கொள்ளையர்கள் முதலில் அங்கிருந்த ஒரு ஊழியரைத் தாக்கிவிட்டு, பின்னர் சொத்துக்களை கொள்ளையிடத் தொடங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. அப்போது, குறித்த நிறுவனத்தில் இருந்த சுமார் 6 கோடி ரூபாய்க்கு அண்மித்த பணத்துடன், நிறுவன உரிமையாளர் அணிந்திருந்த 4 தங்க மாலைகளையும் 3 தங்க மோதிரங்களையும் இவர்கள் பலவந்தமாக பறித்துச் சென்றுள்ளனர்.
குற்றத்தைச் செய்த பின்னர் சந்தேகநபர்கள் வந்த வெள்ளை நிற காரிலேயே பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பாதுகாப்பு கமரா காட்சிகள் மற்றும் ஏனைய சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.