அராவ, மொறுகல பிரதேசத்தில் இருந்து உரிமம் இன்றி மனிதாபிமானமற்ற முறையில் லாரியில் ஏற்றிக்கொண்டு பதுளை நோக்கி சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட ஐந்து மாடுகளுடன், சந்தேகத்தின் பேரில் ஒரு தந்தையும் அவரது இரண்டு மகன்களும் அராவ பூனகேவெவ பிரதேசத்தில் வைத்து அராவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (2) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில், பதுளை, பதுளுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய தந்தையும், 19 மற்றும் 26 வயதுடைய அவரது இரண்டு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள், குறித்த லாரியை பரிசோதித்தபோது, 2 முதல் 10 வயதுக்குட்பட்ட ஐந்து மாடுகள் சட்டபூர்வமான உரிமங்கள் எதுவுமின்றி மிகவும் நெருக்கமாக அடைக்கப்பட்டு, துன்புறுத்தும் விதமாக கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. மொறுகல பிரதேசத்தில் இருந்து ஏற்றப்பட்ட இந்த மாடுகள் பதுளை பிரதேசத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தமை விசாரணைகளில் மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன, பதுளை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்ஷிரி விஜேசேன, பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹன மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் I வேஹித தேஹப்பிரிய ஆகியோரின் அறிவுறுத்தலின் கீழ், அராவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமன் குமாரவின் வழிகாட்டலில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த விசாரணை குழுவில் உப பொலிஸ் பரிசோதகர் ஜியாரத்ன, பொலிஸ் சார்ஜென்ட்கள் 63599 வருண, 34543 பிரேமரத்ன, 72900 எரங்க, 29628 ஹேரத், 89923 குமார மற்றும் 61640 திசாநாயக்க ஆகியோர் அடங்குவர்.