மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக திருமதி சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க அவர்கள் நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக பதவியேற்றார். அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு இணங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவிய வெற்றிடத்திற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நியமன நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க அவர்களும் கலந்துகொண்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாமில் புதிதாக இணைந்த திருமதி கருணாநாயக்க, இந்த பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக நீண்ட காலமாக பாராட்டத்தக்க சேவையாற்றிய ஒரு சிரேஷ்ட சட்டத்தரணியாவார். அரசாங்கத்திற்காக ஆஜராகி பல சிக்கலான மற்றும் முக்கியமான வழக்குகளை வெற்றிகரமாக நடத்தியுள்ள இவர், நீதித்துறையில் பரந்த அனுபவமுள்ள ஒரு அதிகாரியாக சட்ட சமூகத்தால் பெரிதும் மதிக்கப்படுகிறார்.
சிரேஷ்ட நீதிபதி ரத்னப்பிரிய குருசிங்க தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு கடந்த செப்டம்பர் 02ஆம் திகதி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவிய நீதிபதி வெற்றிடங்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது. உயர் நீதிமன்றங்களில் நிலவும் இவ்வாறான வெற்றிடங்களால் பொதுமக்களின் வழக்குகள் தாமதமாவதைத் தடுப்பதற்கும், நீதித்துறை அமைப்பின் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாகவும் திறம்படவும் பேணுவதற்கும் இந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டியதன் அவசியத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதற்கு முன்னர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் சுட்டிக்காட்டியிருந்தது.
திருமதி சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இவ்வாறு பதவியேற்றதன் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவிய வெற்றிடங்களின் எண்ணிக்கை 4 ஆக குறைந்துள்ளது. எதிர்காலத்தில் அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் எஞ்சிய வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளன. இதன் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முழுமையான கட்டமைப்பு நிறுவப்பட்டு, மக்களுக்கு நீதி வழங்கும் செயல்முறை மேலும் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.