பியுமி ரூ. 225 மில்லியன், தாம்புக்கல ரூ. 194 மில்லியன் வரி செலுத்தவில்லை என வழக்கு!

piyumi-files-case-alleging-that-225-million-rupees-and-194-million-rupees-of-thambugala-tax-have-not-been-paid

 அரசாங்கத்திற்கு ரூபா 2250 இலட்சத்திற்கும் அதிகமான வரிப் பணத்தைச் செலுத்தத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபல மாடல் பியுமி ஹன்சமாலி மற்றும் அவுரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தாம்புக்கல ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் சமர்ப்பித்த இந்த முறைப்பாடு கொழும்பு மேலதிக நீதவான் ஓஷத மிஹார மஹாரச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.




இதன்போது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தினேஷ் பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்குத் தேவையான சட்டமா அதிபரின் ஆலோசனை தற்போது கோரப்பட்டுள்ள போதிலும், அந்த ஆலோசனை இதுவரை கிடைக்கவில்லை. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான 419 மில்லியன் ரூபா வருமான வரி செலுத்தத் தவறியமை தொடர்பில் இந்த இரண்டு பிரதிவாதிகளுக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 'லோலியா ஸ்கின் கேர்' தனியார் நிறுவனத்தின் உரிமையாளராகச் செயற்படும் பியுமி ஹன்சமாலி 225 மில்லியன் ரூபா வரிப் பணத்தையும், விரஞ்சித் தாம்புக்கல 194 மில்லியன் ரூபா வரிப் பணத்தையும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவையிலுள்ள வரிகள், அபராதங்கள் மற்றும் வட்டிப் பணத்தை அறவிடுவதற்காக இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பிரதிவாதிகளும் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 186, 189 மற்றும் 190 ஆம் பிரிவுகளின்படி வரி நிர்வாகத்திற்கு இடையூறு விளைவித்து குற்றச் செயல் புரிந்தமை,


முறையான வரி ஆவணங்களைப் பராமரிக்காமை மற்றும் வரி செலுத்தத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு இவர்கள் குற்றவாளிகள் என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில், பியுமி ஹன்சமாலி இந்த முறைப்பாடுகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்த போதிலும், அது தொடர்பில் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என சட்டத்தரணி மேலதிக அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து தெரிவித்தார். சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் பரிசீலித்த மேலதிக நீதவான், சம்பந்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிக்கையிடுமாறு உத்தரவிட்டு, வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Post a Comment

Previous Post Next Post