அங்குலான, சயுரபுர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ள மின் தூக்கி கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேற்று (27) நண்பகல் ஒரு இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. குடியிருப்பு வளாகவாசிகள் அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தாக்குதல் காரணமாக நடந்த ஒரு கொலை என தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் வத்தூவ, குடவஸ்கடுவ பிரதேசத்தில் வசித்து வந்த 24 வயதுடைய யுவதியாவார். உயிரிழந்த யுவதிக்கும் அவரது காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதே இந்தக் கொலைக்கு உடனடி காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கிடைத்த தகவல்களின்படி, இந்த ஜோடிக்கு இடையே நீண்ட காலமாக பல்வேறு மோதல்கள் இருந்து வந்துள்ளன. இது தொடர்பாக இதற்கு முன்னர் அவர்களது பெற்றோர்கள் பொலிஸில் முறைப்பாடுகளையும் செய்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த உயிரிழந்த யுவதியின் தந்தை, இந்த உறவு களுத்துறையில் வசித்த காலத்தில் இருந்தே நீடித்து வந்ததாகவும், காதலன் போதைப்பொருளுக்கு அடிமையானதால் பெற்றோர்கள் இந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார். களுத்துறை வடக்கு பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவரை சந்திப்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், தனது மகள் அந்த உறவை கைவிட விரும்பவில்லை என்றும், காதலன் அழைக்கும் எந்த நேரத்திலும் அவரை சந்திக்கச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார். சம்பவம் நடந்த அன்றும் காதலன் அவளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, பின்னர் வாக்குவாதம் செய்து, அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் உள்ள மின் தூக்கி அறைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரால் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என ஆரம்பகட்ட விசாரணைகளில் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
கொலை செய்த பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரை கைது செய்வதற்காக அங்குலான பொலிஸார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதோடு, பல பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.