அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயக விரோதமானவை என்று சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், இந்த நிலைமை குறித்து உடனடியாக கவனம் செலுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுப்பதாக வலியுறுத்தினார். கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்படாததால், தற்போது அரச நிறுவனங்கள் தொடர்பான 60 கணக்காய்வு அறிக்கைகளும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய சுமார் 70 கணக்காய்வு அறிக்கைகளும் தாமதமாகியுள்ளன. மொத்தமாக 130க்கும் மேற்பட்ட கணக்காய்வு அறிக்கைகள் வெளியிடப்படாமல் முடங்கியுள்ளன. இந்த தாமதம் காரணமாக, அடுத்த ஆண்டு மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்பட வேண்டிய 2025ஆம் ஆண்டுக்கான பிரதான கணக்காய்வு அறிக்கையை தயாரிக்கும் பணிகளை ஆரம்பிப்பதில் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் நாயகம் இல்லாததால், பாராளுமன்றத்தின் நிதி கட்டுப்பாட்டுடன் தொடர்புடைய கோப் (COPE) மற்றும் கோபா (COPA) குழுக்களின் செயற்பாடுகளும் முழுமையாக ஸ்தம்பித்துள்ளன. பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின்படி, இந்தக் குழுக்களின் செயற்பாட்டிற்கு கணக்காய்வாளர் நாயகத்தின் பங்கேற்பு கட்டாயமாகும். அந்தப் பதவி வெற்றிடமாக இருப்பதால், அனைத்து விசாரணைகளும் இடைநிறுத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கிடையில், தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் நிதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி அந்த அதிகாரங்களை நிதி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிர்வாக வெற்றிடம் காரணமாக நாட்டில் பல கடுமையான நிதி மற்றும் அரசியலமைப்பு நெருக்கடிகள் உருவாகியுள்ளதால், கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தகுதியான ஒருவரை உடனடியாக நியமிக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.