தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அளுத்கம-வெலிபென்ன நுழைவாயிலுக்கு அருகில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றொரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் தர்கா நகர், மீகம, பஹே கனவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான கே.ஏ. சதிமா தில்ருக்ஷி என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த மரண விபத்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அளுத்கம-வெலிபென்ன நுழைவாயில் பாதையில் ஹதர கனவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணைகளின்படி, வெலிபென்னையிலிருந்து அளுத்கம நோக்கி ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியுள்ளன. இதில் சந்தேகநபரான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், உயிரிழந்த பெண் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய சந்தேகநபர், பின்னர் அவ்விடத்திலிருந்து தப்பிச் செல்லும் போது மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி இரண்டாவது விபத்தில் சிக்கியுள்ளார். அவர் முதலில் தர்கா நகர் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் களுத்துறை நாகொட போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிரிழந்த பெண் தர்கா நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய 22 வயதுடைய சந்தேகநபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர். இந்த மரணம் தொடர்பில் வெலிபென்ன திடீர் மரண விசாரணை அதிகாரி நிஹால் ஜயனெத்தி திடீர் மரண விசாரணையை நடத்தியுள்ளார். நாகொட மருத்துவமனையின் பிரதம சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் கே.டி.எம். பி.டி. குணதிலக்கவினால் மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனையில், மரணத்திற்கான காரணம் தலை மற்றும் கழுத்தில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
திடீர் மரண விசாரணையின் பின்னர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட வெலிபென்ன திடீர் மரண விசாரணை அதிகாரி நிஹால் ஜயனெத்தி, மோட்டார் சைக்கிள் ஓட்டும் போதும் பயணிக்கும் போதும் பாதுகாப்பு ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுவது ஓட்டுநர் மற்றும் பயணிகளின் உயிர் பாதுகாப்புக்காகவே என்று தெரிவித்தார். ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் நபர்களுக்கு பொலிஸார் அபராதப் பத்திரங்களை வழங்கும்போது, அந்த பொலிஸ் அதிகாரிகளை திட்டுவதாகவும், பொலிஸார் தமது கடமையை மக்களின் உயிர் பாதுகாப்புக்காகவே செய்கிறார்கள் என்பதை நினைப்பதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஹெல்மெட் கையில் தொங்க விடுவதற்காக அல்ல, தலையைப் பாதுகாப்பதற்காகவே என்று சுட்டிக்காட்டிய மரண விசாரணை அதிகாரி, தற்போது இளைஞர்கள் வீதியில் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் வாகனம் ஓட்டுவதால் இவ்வாறான விபத்துகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். நாட்டிற்கு சேவை செய்யக்கூடிய மதிப்புமிக்க மனித உயிர்கள் இவ்வாறு இழக்கப்படுவது குறித்து அனைத்து குடிமக்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வெலிபென்ன பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.