இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் நாளை (19) ஆரம்பமாகவுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை, இந்திய துணை ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு விஜயம் என வர்ணிக்கிறது.
இந்த விஜயம் அண்மைய காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகளின் தொடர்ச்சியாகக் கருதப்படுவதுடன், இந்திய மற்றும் இலங்கை மக்களுக்கிடையேயான ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்று உறவுகளை மேலும் பலப்படுத்தும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டுகிறது.தனது விஜயத்தின் போது, இந்திய துணை ஜனாதிபதி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடனும், அரசியல் மற்றும் இந்திய சமூகத் தலைவர்களுடனும் விசேட கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். அத்துடன், அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் வட மாகாணத்தில் உள்ள ஒரு வைத்தியசாலையை பார்வையிடவும் திட்டமிட்டுள்ளார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்திற்கு இணையாக, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பு நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்த இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாட்டிற்கு வரும் துணை ஜனாதிபதி, அதிவேக நெடுஞ்சாலை வழியாக ஒருகொடவத்தை, பொரளை, ஹோர்ட்டன் பிளேஸ், லிபர்ட்டி சுற்றுவட்டம் மற்றும் காலி வீதி வழியாக தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வருவார். விசேட வாகன அணிவகுப்பு செல்லும் சந்தர்ப்பங்களில் அந்த வீதிகளில் வாகனப் போக்குவரத்து சந்தர்ப்பத்திற்கேற்ப மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் அறிவித்துள்ளது.
அதன் பின்னர், தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இருந்து ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை மற்றும் கதிரேசன் கோவில் வரை விசேட வாகன அணிவகுப்பு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. தனது விஜயத்தை முடித்துக்கொண்டு, இந்திய துணை ஜனாதிபதி 20 ஆம் திகதி தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இருந்து கொழும்பு துறைமுக ஹெலிபேட் பகுதிக்குச் சென்று நாட்டிலிருந்து புறப்படவுள்ளார்.
விசேட பயணங்கள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது. அதன்படி, கண்டி வீதியிலிருந்து வரும் வாகனங்கள் களனிப் பாலம் மற்றும் ஆமர் வீதி வழியாக பஞ்சிகாவத்தை அல்லது மருதானை நோக்கியும், காலி வீதியிலிருந்து வரும் வாகனங்கள் கொள்ளுப்பிட்டி அல்லது காலி முகத்திடலிலிருந்து கொம்பனித் தெரு நோக்கியும் திருப்பி விடப்படும். கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் ரீகல் சுற்றுவட்டம், கொம்பனித் தெரு வழியாக ஆர்.ஏ. டி மெல் மாவத்தையைப் பயன்படுத்தலாம். அவிசாவளை மற்றும் நீர்கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் தோட்டலங்க மற்றும் பியகம வீதி வழியாகச் செல்லலாம். மேலும், விசேட வாகன அணிவகுப்பு புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட வீதிகளில் கொள்கலன், டிப்பர் மற்றும் லொறி வாகனங்கள் நுழைவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என பொலிஸ் மேலும் வலியுறுத்துகிறது.