
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அறிவித்துள்ளது, நாளை (04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணி நேரம் கொழும்பு மற்றும் பல புறநகர் பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும். முல்லேரியா துணை மின்நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டியுள்ளதே இதற்கு காரணம்.
இந்த நிலைமையின் காரணமாக, கொழும்பின் பிரதான நகர எல்லைகளான 01 முதல் 15 வரையிலான பகுதிகளுக்கு மேலதிகமாக, பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, ராஜகிரிய, மிரிஹான, மெதிவெல, நுகேகொட, களுபோவில, கொஹுவல மற்றும் நாவல ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
மேலும், கொலன்னாவ, IDH, கோட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒறுகொடவத்த, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தல ஆகிய பகுதிகளுக்கும் குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை மேலும் தெரிவித்துள்ளது.