தீவின் பல்வேறு பகுதிகளில் பதிவான குற்றச் சம்பவங்கள் மற்றும் காட்டு யானை தாக்குதல்கள் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திமலே, விஜயபுர பிரதேசத்தில் இடம்பெற்ற காட்டு யானை தாக்குதலில் சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரும், சேனைப் பயிர்ச்செய்கையாளர் ஒருவரும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.
இத்திமலே கொட்டிகலையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய சிவில் பாதுகாப்பு கான்ஸ்டபிள் டி.எம். சுகத் நயனந்த மற்றும் விஜயபுரத்தைச் சேர்ந்த 47 வயதுடைய லியனகே ரஞ்சித் சாந்த என்ற விவசாயி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.தனது சேனைப் பயிர்ச்செய்கைக்குச் சென்று கொண்டிருந்த ரஞ்சித் சாந்தவை, பயிர் நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை தாக்கி கொன்றது. இந்தச் செய்தி கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த வனவிலங்கு அதிகாரிகள், காட்டு யானைக் கூட்டத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, வனவிலங்கு திணைக்களத்துடன் இணைக்கப்பட்டு சேவையாற்றிய சிவில் பாதுகாப்பு கான்ஸ்டபிள் நயனந்தவும் அதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
கிராமங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்ட அதிகாரிகள் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டி, கோபமடைந்த கிராமவாசிகள் சிலர் வனவிலங்கு அதிகாரிகளைத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த நான்கு வனவிலங்கு அதிகாரிகள் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் இத்திமலே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த ஆனந்த மற்றும் மொனராகலை வனவிலங்கு பிராந்திய பொறுப்பதிகாரி ஹர்ஷ ருவன் குமார ஆகியோரின் வழிகாட்டலில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், அநுராதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காட்டு யானை தாக்குதல்கள் காரணமாக மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று தனது மகனுடன் திரும்பி வந்து கொண்டிருந்த 52 வயதுடைய யூசுப் அயூப்கான் என்பவர் கெக்கிராவ ரயில் நிலையம் அருகே காட்டு யானையால் மிதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சம்பவம் நடந்தபோது அவரது மகன் ஓடி தப்பித்துள்ளார்.
தலாவ பிரதேசத்தில் வசிக்கும் தனது சகோதரியின் நலன் விசாரித்துவிட்டு திரும்பிச் சென்று கொண்டிருந்த நுவரெலியா, கெட்டம்புமாவ பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய திருமதி ஜே.ஜி. ஸ்ரீயலதா என்பவரும் காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார். அத்துடன், சிராவஸ்திபுரத்தைச் சேர்ந்த 48 வயதுடைய கருணாரத்ன முதியன்சேலாகே திசாநாயக்க பண்டா என்பவர் தனது வீட்டுத் தோட்டத்திற்கு வந்த ஒற்றை யானையை விரட்ட முயன்றபோது, அந்த யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.