சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் பூனைக்கு துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இலங்கை விலங்கு நலக் கூட்டணி (Animal Welfare Coalition) அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தலாத்துஓயா பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அத்துல்கம பிரதேசத்தைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் ஆவர். முறைப்பாடு கிடைத்த சிறிது நேரத்திலேயே அத்துல்கம பிரதேசத்தில் வைத்து இவர்கள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டனர். இச்சம்பவம் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்றதாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். தண்டனைச் சட்டக்கோவையின் 411வது பிரிவு, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 63(அ) பிரிவு மற்றும் விலங்கு வதைக்கு எதிரான சட்ட ஏற்பாடுகளின் கீழ் இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.