
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி, அதற்கான பணத்தைக் கண்டுபிடிக்கும் நோக்கில் ஹொரணை நகரில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களின் கபின்களை உடைத்து பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் 'திஹேனகம பிந்துவா' என்ற புனைப்பெயருடைய நபர் ஒருவரை ஹொரணை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹொரணை நகரின் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களிலிருந்து பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் காணாமல் போனது தொடர்பாக கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் விரிவான விசாரணையை ஆரம்பித்திருந்தனர். குற்றங்கள் நடந்த இடங்களுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமரா காட்சிகளைப் பரிசோதித்து மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்ய பொலிஸ் அதிகாரிகளால் முடிந்துள்ளது.
திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியின் இரகசியப் பூட்டை அகற்றுவதற்காக சந்தேகநபர் இலிம்ப பிரதேசத்தில் உள்ள கையடக்கத் தொலைபேசி பழுதுபார்க்கும் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அந்த வேலையைச் செய்ய அந்த இடம் மறுத்துள்ளது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடல்களில், குறித்த கையடக்கத் தொலைபேசியை மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள ஒரு இடத்தில் அடகு வைக்க சந்தேகநபர் நடவடிக்கை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளில், அவர் இதற்கு முன்னரும் திருட்டு மற்றும் போதைப்பொருள் தொடர்பான 42 குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட ஒரு முன்னாள் குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. போதைப்பொருள் பாவனைக்கு அதிகமாக அடிமையாகியுள்ள இவர், தனது தினசரி போதைப்பொருள் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு சுமார் 4000 ரூபாயை இவ்வாறு திருடி சம்பாதித்துள்ளார் என்பது விசாரணைகளில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.