கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மற்றும் விரிவுரையாளர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பரீட்சை முறைகேடுகள், தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் பழிவாங்கல்கள் காரணமாக தனது நேரம், உழைப்பு மற்றும் பணம் வீணடிக்கப்பட்டதாகக் கூறி, 50 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு கோரி, அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர் நுகேகொட மாவட்ட நீதிமன்றத்தில் நஷ்டஈட்டு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
சானத் குமார அத்துக்கோரல என்ற மாணவரால் சட்டத்தரணி தனோஷா பெரேரா ஊடாக இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இந்திக்க மகேஷ் கருணாதிலக்க, முன்னாள் துணைவேந்தர் எச்.டி. கருணாரத்ன, முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பீடாதிபதி எஃப்.டி.எம். நிஹால் சஹபந்து, துறைத் தலைவர் சஷிதா அபேதீர மனோரத்ன, விரிவுரையாளர்களான டி.சி.எல். தியாகுஆரச்சி மற்றும் டபிள்யூ. பி. பிரேமரத்ன, பரீட்சைப் பிரிவின் மேலதிக பதிவாளர் வஜிரா ஹபுகின்ன ஜயரத்ன ஆகியோரும் சட்டமா அதிபரும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
மனுதாரர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தினால் நடத்தப்பட்ட 2022/2023 தொழில்முனைவோர் சிறு வணிக முகாமைத்துவ உயர் டிப்ளோமா பாடநெறியைப் பயின்றுள்ளார். முதல் மதிப்பீட்டில் எந்தப் பிரச்சினையும் எழவில்லை என்றாலும், இரண்டாவது மதிப்பீட்டில் 'சிறு வணிகங்களுக்கான செயல்பாட்டு முகாமைத்துவம்' (508) மற்றும் 'வணிக உத்திகள் மற்றும் நிலைத்தன்மை' (510) ஆகிய பாடங்களில் தனக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.
508 பாடத்திற்குப் பொறுப்பான விரிவுரையாளர், ஒரு மாணவர் மூலம் பண அவசரம் என்று கூறி, தனது கணக்கில் 80,000 ரூபாய் வரவு வைக்குமாறு விடுத்த கோரிக்கையை தான் நிராகரித்ததாக மனுதாரர் மாணவர் கூறுகிறார். பின்னர், 2024 மே மாதத்தில் கிரியல்ல பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு செயலமர்வில், பல்கலைக்கழகத்துடன் தொடர்பில்லாத அந்த விரிவுரையாளரின் கணவருக்கு தனது அறையில் தங்குவதற்கு இடமளிக்கும் கோரிக்கையையும் தான் எதிர்த்ததால், அவர் தன்னுடன் பகைமை பாராட்டத் தொடங்கினார் என்று வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மனக்கசப்பை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் சரியான மதிப்பெண் வழங்கும் முறையிலிருந்து விலகி, தன்னிச்சையாகவும் பழிவாங்கும் நோக்கத்துடனும் தனக்கு குறைந்த மதிப்பெண்களை வழங்கி பரீட்சையில் தோல்வியடையச் செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், பரீட்சைக்கு முன் வினாத்தாளில் உள்ள விடயங்களை வேறு மாணவர் குழுவுக்கு வெளிப்படுத்திய சம்பவம் குறித்தும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 510 பாடத்தில் ஒரு குழுத் திட்டத்திற்காக ஒரு மாணவரிடம் இருந்து 35,000 ரூபாய் வீதம் சேகரிக்கப்பட்டதுடன், திட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்காத சில மாணவர்களுக்கும் விரிவுரையாளர் முழு மதிப்பெண்களை வழங்கியுள்ளார் என்றும் அத்துக்கோரல மேலும் குற்றம் சாட்டுகிறார்.
2025 ஜனவரி மாதத்தில் தான் பரீட்சையில் தோல்வியடைந்ததாக முடிவுகள் வெளியான பின்னர், அது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்ததாகவும், அதன் பின்னர் எந்தவொரு மறுபரீட்சையும் நடத்தப்படாமல், 2025 ஏப்ரல் மாதத்தில் தானும் மேலும் சில மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக ஒரு புதிய பெறுபேற்றுப் பட்டியல் வெளியிடப்பட்டதாகவும் மனுதாரர் குறிப்பிடுகிறார். ஆரம்பத்தில் தோல்வியடைந்த மாணவர்களை பரீட்சை இல்லாமல் பிற்காலத்தில் எவ்வாறு தேர்ச்சி பெறச் செய்தது என்பது குறித்து நிர்வாகம் இதுவரை நியாயமான காரணத்தை வழங்கவில்லை என்பதுடன், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவிடமும் இந்த சம்பவம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளக விசாரணைகள் முடிவடையாத நிலையிலும், முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளையும் பொருட்படுத்தாமல், பல்கலைக்கழக அதிகாரிகள் பட்டமளிப்பு விழாவை நடத்தி, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு டிப்ளோமாக்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சட்டவிரோத, மோசடியான மற்றும் தன்னிச்சையான நடவடிக்கையால் பாடநெறியில் எதிர்பார்த்த தேர்ச்சியை இழந்து நண்பர்களிடையே சங்கடத்திற்கு உள்ளானதாகக் கூறும் சனத் குமார அத்துக்கோரல, தனக்கு ஏற்பட்ட இழப்பிற்காக பிரதிவாதிகளிடமிருந்து 50 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு கோரி நுகேகொட மாவட்ட நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.