கடந்த 30ஆம் திகதி இரவு கொத்மலை நீர்த்தேக்க அணை உடையும் என பொய்யான பிரச்சாரத்தை சமூகமயப்படுத்தி மக்களை பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கியவர்கள் யார் என்பதை உடனடியாக கண்டறியுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் அவர்களுக்கு விசேட பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.
மாகாண ஆளுநர்களுடன் நேற்று (01) நடைபெற்ற விசேட "சூம்" (ZOOM) தொழில்நுட்ப கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரைகளை வழங்கினார்.
அங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இந்த தவறான வதந்தியை சமூகத்தில் பரப்பியது யார் என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு தான் ஏற்கனவே பொலிஸ்மா அதிபருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் அறிவித்துள்ளதாக மேலும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், கொத்மலை நீர்த்தேக்கத்தில் சைரன் ஒலி எழுப்பப்பட்டதாக தவறான கருத்து சமூகத்தில் பரவியிருந்ததாகவும், அந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரிக்குமாறு மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தான் உத்தரவிட்டுள்ளதாகவும் மத்திய மாகாண ஆளுநர் இங்கு குறிப்பிட்டார்.
Tags:
Political