
இன்று (16) முதல், பருவ கால அனுமதிப்பத்திரம் இன்றி பாடசாலை மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் முழுவதும் போக்குவரத்து சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பஸ் வண்டிகள் மூலம் பாடசாலைகளுக்குச் செல்லத் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பொறியியலாளர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.
நிலவிய அனர்த்த நிலைமைக்குப் பின்னர், இன்று ஆரம்பமாகும் பாடசாலை தவணைக்காக போக்குவரத்து சபையின் தயார்நிலை குறித்து நேற்று (15) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தலைவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளில் சுமார் 99% முடிந்தவரை மீள இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், நேற்று (15) வரை 4479 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நண்பகல் 12 மணி வரை ஒரு மில்லியன் பயணிகள் தமது இலக்கை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கண்டி – கம்பளை ஊடாக கொழும்பு பஸ் சேவை, கண்டி – வெலிமடை பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ரம்புக்கனை – கேகாலை பஸ் சேவை பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார். அத்துடன், புகையிரதத்துடன் இணைந்த ஒருங்கிணைந்த கால அட்டவணைகளின்படி பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கண்டியிலிருந்து ரம்புக்கனை வரை மு.ப. 4.15 மற்றும் மு.ப. 4.45 இற்கு 2 பஸ் வண்டிகள் வருவதாகவும், அது ரம்புக்கனையிலிருந்து மு.ப. 5.57 மற்றும் மு.ப. 6.20 இற்குப் புறப்படும் புகையிரதங்களுக்குப் பயணிகளைக் கொண்டுவரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.