இலங்கையின் 40 வருட வெளிநாட்டு வேலைவாய்ப்பு வரலாற்றில் பதிவான மிக உயர்ந்த வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத் தொகை 2025 ஆம் ஆண்டில் பெறப்பட்டுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் நாட்டிற்கு 8.07 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட பாரிய பணப் பரிமாற்றத் தொகை கிடைத்துள்ளது.
பணியகம் மேலும் குறிப்பிடுகையில், கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில், வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து 8076 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (8.07 பில்லியன் டொலர்கள்) இலங்கைக்குக் கிடைத்துள்ளன. இது உள்ளூர் நாணயத்தில் 2432 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியாகும். 2024 ஆம் ஆண்டில் நாட்டிற்கு கிடைத்த 6575 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப் பரிமாற்றத்துடன் ஒப்பிடுகையில், இது 22.8 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் காட்டுகிறது.
மேலும், கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு மாதத்திற்குப் பதிவான மிக உயர்ந்த வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத் தொகை பதிவாகியுள்ளதுடன், அதன் பெறுமதி 879.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இந்த சாதனை வளர்ச்சிக்கு தற்போதைய அரசாங்கம் எடுத்த கொள்கை ரீதியான முடிவுகளும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் தரமான பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களும் காரணமாக அமைந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கடந்த ஆண்டு 310,000 க்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.