இலங்கை பாடசாலைகள் தடகள சங்கம், 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகள் தடகளப் பருவத்தை இலக்காகக் கொண்டு, சேர் ஜோன் டார்பட் தடகளப் போட்டித் தொடருக்கான உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இம்முறைப் போட்டித் தொடரில் குறிப்பிடத்தக்க மாற்றம் என்னவென்றால், கடந்த 12 ஆண்டுகளாக சேர் ஜோன் டார்பட் போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்கிய ரிட்ஸ்பரி நிறுவனம் அந்த அனுசரணையில் இருந்து விலகியுள்ளது.
எவ்வாறாயினும், ஒரு புதிய அனுசரணையாளரின் கீழ் போட்டித் தொடர் தொடர்ந்து நடைபெறும் என்று பாடசாலைகள் தடகள சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.இந்த ஆண்டுக்கான பாடசாலைகள் தடகளப் பருவம் மே மாதம் 21 முதல் 23 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெறும் பாடசாலை வயதுப் பிரிவுகளுக்கான அஞ்சல் ஓட்டப் போட்டித் தொடருடன் தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் கம்பஹா மாவட்டத்திற்காக வத்துபிட்டிவல மத்திய மகா வித்தியாலய விளையாட்டரங்கில் 12 வயதுக்குட்பட்டோருக்கான முதல் கட்டப் போட்டிகள் நடைபெறும். ஜூன் 5 முதல் 7 வரை வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களை இலக்காகக் கொண்டு வென்னப்புவ பொது விளையாட்டரங்கிலும், ஜூன் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்காக பெலியத்த பொது விளையாட்டரங்கிலும் பிராந்தியப் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூன் மாத இறுதியிலும் ஜூலை மாத தொடக்கத்திலும் கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கான முதல் கட்டப் போட்டிகள் பண்டாரகம பொது விளையாட்டரங்கில் நடைபெறும். ஜூலை 7 முதல் 8 வரை வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்காக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் போட்டிகள் நடைபெறும். கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டப் போட்டிகள் ஜூலை 11 ஆம் திகதி திருகோணமலை வெபர் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. முழுப் போட்டித் தொடரின் முக்கியமான கட்டமான சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட தடகளப் போட்டித் தொடர் செப்டம்பர் 7 முதல் 10 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆண்டின் பிற்பகுதியில், அதாவது நவம்பர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் 12 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் போட்டித் தொடரின் இரண்டாம் கட்டம் தியகமவில் நடைபெறும். நவம்பர் 4 ஆம் திகதி சேர் ஜோன் டார்பட் வீதி ஓட்டப் போட்டி தியகமவில் நடைபெறும். 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகள் தடகளப் பருவம் நவம்பர் 5 முதல் 7 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெறும் இளையோர் தடகளப் போட்டித் தொடரின் இரண்டாம் கட்டத்துடன் நிறைவடையும். நாடு முழுவதும் பாடசாலைகள் தடகள வளர்ச்சியை வலுப்படுத்துவதும், ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு பரந்த பங்கேற்பை வழங்குவதும் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட அட்டவணையின் முக்கிய நோக்கம் என்று சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.