மகா கருவூலத்தின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம். ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் அகால மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களிலும் பல்வேறு நபர்களாலும் வெளியிடப்படும் கருத்துக்களால் தாம் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளதாகக் கூறி அவரது மனைவி குளியாப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த மே மாதம் 06 ஆம் திகதி செய்யப்பட்ட இந்த முறைப்பாட்டில், தனது கணவரின் மரணம் குறித்து தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் உதய பிரபாத் கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என்று வெளியிடும் கருத்துக்களால் தானும் தனது குழந்தைகளும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, மன அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கையிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதன்படி, ரங்க நிஷாந்தவின் மரணம் சந்தேகத்திற்குரியது என்று கூறிய உதய கம்மன்பில மற்றும் மேலும் சிலரை அந்த மரண விசாரணையில் சாட்சிகளாக நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதற்கு இணையாக, குறித்த அறிக்கை தொடர்பாக விசாரணைக்காக எதிர்வரும் மே 09 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு குளியாப்பிட்டிய பொலிஸில் ஆஜராகுமாறு கம்மன்பிலவுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு எதிராக முன்வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த உதய கம்மன்பில, தன்னிடம் உள்ள ஆதாரங்களுடன் எதிர்வரும் சனிக்கிழமை குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்குச் செல்ல எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.