அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இடைக்காலத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில், காங்கிரஸின் கட்டுப்பாட்டிற்கான போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் போக்கையும், வாஷிங்டனின் அதிகார சமநிலையையும் மீண்டும் தீர்மானிக்கும்.
ஜனாதிபதியின் செயல்பாடுகள் குறித்த ஒரு பொது வாக்கெடுப்பாக செயல்படும் இந்தத் தேர்தலில், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஜனாதிபதி ட்ரம்பின் செல்வாக்கு குறைவதைப் பயன்படுத்தி, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை இரண்டிலும் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற ஜனநாயகக் கட்சி எதிர்பார்க்கிறது.இதில், அமெரிக்கர்கள் பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் 100 இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கும், பல ஆளுநர் பதவிகளுக்கும் வாக்களிப்பார்கள். காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற ஜனநாயகக் கட்சிக்கு பிரதிநிதிகள் சபையில் மூன்று இடங்களும், செனட் சபையில் நான்கு இடங்களும் தேவை. இருப்பினும், ஜனநாயகக் கட்சி கருத்துக்கணிப்புகளில் சிறிய முன்னிலை பெற்றிருந்தாலும், பொருளாதாரம் குறித்து வாக்காளர்கள் இன்னும் குடியரசுக் கட்சியையே அதிகம் நம்புவதாக பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
தற்போதைய சூழல் குடியரசுக் கட்சிக்கு சவாலாக உள்ளது, ஏனெனில் பணவீக்கம் மற்றும் ஈரான் தொடர்பான போர்ச் செலவுகள் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் ஜனாதிபதியின் ஒப்புதல் விகிதம் 40 சதவீதம் என்ற குறைந்த மட்டத்தில் உள்ளது. குடியரசுக் கட்சிக்கு ஆதரவளிக்கும் AFP Action குழுவும், வாக்காளர்களின் அலட்சியம் மற்றும் கட்டமைப்புச் சிக்கல்கள் காரணமாக செனட் சபையின் பெரும்பான்மை ஆபத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இரு தரப்பினரும் வெவ்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர், ஜனநாயகக் கட்சி மக்களின் பொருளாதார அழுத்தங்கள் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை நடத்துகிறது. இதற்கிடையில், குடியரசுக் கட்சியினர் தங்கள் நிதி நன்மைகள், குடியேற்றப் பிரச்சினைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வாக்காளர்களை ஈர்க்க முயற்சிக்கின்றனர். இருப்பினும், தேர்தல் முடிவுகள் மாறக்கூடும் என்பதால், போட்டி இன்னும் உறுதியாகக் கூற முடியாது என்று குடியரசுக் கட்சி வலியுறுத்துகிறது.