திட்வா காரணமாக கட்டுமானத் துறை மந்தமாகிவிட்டது.

the-construction-sector-has-been-paralyzed-due-to-the-pandemic

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் மூலதனச் செலவினங்களை அதிகரிப்பதாலும், ‘திட்வா’ (Ditwah) சூறாவளிக்குப் பிந்தைய எதிர்பார்க்கப்படும் புனரமைப்புப் பணிகளாலும் இலங்கையின் கட்டுமானத் துறைக்குச் சாதகமான சூழல் உருவாகியிருந்தாலும், திட்டங்களைத் தொடங்குவதில் அரச அதிகாரிகள் காட்டும் அலட்சியம் காரணமாக இத்துறையின் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சிக்குத் தடங்கல் ஏற்படலாம் என்று இலங்கை கட்டுமானத் தொழில் சபை தெரிவித்துள்ளது.




கட்டுமானத் துறையின் மறுமலர்ச்சிக்குத் தேவையான பின்னணி ஆவணப்படுத்தப்பட்டுத் தயாராக உள்ளது என்று அந்தச் சபையின் பொதுச் செயலாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பொறியியலாளர் நிஸ்ஸங்க என். விஜேரத்ன சுட்டிக்காட்டினார். ‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட சேதம் 2004 சுனாமி பேரழிவால் ஏற்பட்ட சேதத்தை விட அதிகமாக இருப்பதால், நாட்டில் ஒரு பெரிய புனரமைப்பு செயல்முறை தேவைப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இருப்பினும், திட்டங்களை விரைவாகத் தொடங்குவதற்கு அரச அதிகாரிகள் உரிய முன்முயற்சி எடுக்காததால், இந்த எதிர்பார்ப்புகள் யதார்த்தமாக மாறாமல் போகலாம் என்று விஜேரத்ன எச்சரித்தார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் மூலதன அபிவிருத்திப் பணிகளுக்காக 1,200 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தாலும், அதில் சுமார் 25% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.




2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினங்களுக்காக 1,600 பில்லியன் ரூபா முன்மொழியப்பட்டிருந்தாலும், அரச அதிகாரிகளின் தற்போதைய அணுகுமுறை தொடர்ந்தால், 300 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள பணிகள் நிறைவு செய்யப்படாமல் போகும் என்று அவர் கருதுகிறார். தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக்கள் மற்றும் டெண்டர் சபைகளில் உள்ள அரச அதிகாரிகள் மிகவும் பாதுகாப்பான அணுகுமுறையைப் பின்பற்றுவதே இந்த தாமதங்களுக்கு முக்கிய காரணம் என்றும் அவர் மேலும் விளக்கினார்.

இந்தக் குழுக்களுக்கு அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் பற்றாக்குறை இருப்பதால், அதற்குத் தீர்வாக அனுபவமிக்க முன்னாள் அரச அதிகாரிகளை நியமிக்க கட்டுமானத் தொழில் சபை முன்மொழிந்துள்ளது. மேலும், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வணிகர்களைக் கொண்ட நிதி முகாமைத்துவக் குழு நிதி திரட்டுவதற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், புனரமைப்புப் பணிகளை வழிநடத்த அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட ஒரு செயலணி உருவாக்கப்பட வேண்டும் என்று பொறியியலாளர் நிஸ்ஸங்க விஜேரத்ன வலியுறுத்தினார்.

Post a Comment

Previous Post Next Post