பல் பிடுங்கும் சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக 20 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) இரவு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். பொக்குனுவிட்ட, பண்டாரஹேன பிரதேசத்தில் வசித்து வந்த கொட்டேகே தேவ்மி மதுஷிகா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹொரணை அவசர மரண விசாரணை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பல் வலியின் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக இந்த யுவதி கடந்த 14 ஆம் திகதி பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது மேல் தாடையில் உள்ள ஒரு பல்லை பிடுங்குவதற்கு சம்பந்தப்பட்ட வைத்தியர் நடவடிக்கை எடுத்துள்ளார், அந்த சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
அவரது நோய்த்தன்மை மோசமடைந்ததால், 15 ஆம் திகதி மீண்டும் சம்பந்தப்பட்ட மருத்துவ நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவரது இரத்த அழுத்தம் குறைந்துள்ளதை மருத்துவ ஊழியர்கள் அவதானித்துள்ளனர். அந்த நேரத்தில் நோயாளியின் நிலைமை தீவிரமானது என்பதை உணர்ந்த மருத்துவர்கள், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.