தோஹாவில் இருந்து கட்டுநாயக்க வந்த விமானத்தில் குண்டுகள் இருப்பதாக போலி மின்னஞ்சல்

fake-email-bombs-on-plane-from-doha-to-katunayake

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (28) காலை தோஹாவிலிருந்து வந்த விமானம் தொடர்பில் கிடைத்த தகவலின் காரணமாக அங்கு தீவிர பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது. 245 பயணிகளுடன் காலை 8.27 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்த அந்த விமானத்திற்குள் வெடிப்புச் சம்பவத்தை நடத்தத் தயாராக இருந்த நான்கு பேர் இருப்பதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி கிடைத்தமையே இதற்குக் காரணம்.




இந்த தகவல் தொடர்பில் விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு, சம்பந்தப்பட்ட விமானத்தின் விமானியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விமானத்திற்குள் எந்தவிதமான பாதுகாப்பற்ற நிலைமையும் இல்லை என விமானி உறுதிப்படுத்தியுள்ளார்.

விமானியின் கூற்று அவ்வாறிருந்த போதிலும், விமானம் தரையிறக்கப்பட்ட பின்னர் அதனை விசேட பாதுகாப்புப் பகுதிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பின்னர் அனைத்து பயணிகளும் மற்றும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினர் உட்பட நிபுணர் குழுக்களால் விமானம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த தேடுதல் நடவடிக்கையின் போது விமானத்திற்குள் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான பொருளோ அல்லது நபரோ கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தினர்.




சோதனைகளுக்குப் பிறகு, விமானம் மீண்டும் சாதாரண விமானப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டதுடன், பிற்பகல் 1.07 மணிக்கு அது தோஹா கட்டார் நோக்கி புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கடந்த 26ஆம் திகதி கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் குண்டு இருப்பதாக கிடைத்த தகவலைப் போன்றே இதுவும் ஒரு போலியான தகவல் என பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், இந்த இரண்டு மின்னஞ்சல் செய்திகளும் வெளிநாடொன்றிலிருந்து இங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறான நாசகாரச் செயல்களைச் செய்யும் நபர்களை அடையாளம் காண்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post