தமது வீட்டில் நீர் மோட்டார் செயலிழந்ததால், அதனை பரிசோதித்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி பன்னிரண்டு வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கின்னியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த மாணவன் நேற்று முன்தினம் (14) இரவு கின்னியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் கின்னியா, காக்கமுனையில் வசித்து வந்த காக்கமுனை அரச கலவன் பாடசாலையில் ஏழாம் தரத்தில் கல்வி கற்ற அப்துல் காதர் சாதிக் என்ற மாணவனாவார்.செயலிழந்திருந்த நீர் மோட்டாரை மீண்டும் இயக்க முயற்சித்தபோது மாணவனை மின்சாரம் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கின்னியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டப்ள்யூ.எச்.சி.கே. பெர்னாண்டோ, மரணத்திற்கான காரணத்தை கண்டறிய சடலத்தை திருகோணமலை வைத்தியசாலையின் சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து கின்னியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.